சத்திய வேதம் பக்தரின் கீதம்
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
சத்திய வேதம்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்
சத்திய வேதம்
1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும் பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்.
சத்திய வேதம்
2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்.
சத்திய வேதம்
3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்.
சத்திய வேதம்
4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்.
சத்திய வேதம்
5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே.
சத்திய வேதம்
6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்.
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
சத்திய வேதம்.